குடும்பம், வேலை, இயக்கம் மூன்றிலும் கவனம்
ஏழு வயது இருக்கும் போது எனக்கு primary complex என்னும் சிறுவயதில் வரும் காச நோய். அப்போது ஆரணியில் இருந்தோம். சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அப்பா வேலூர் சி.எம்.சி மருத்துவ மனைக்கு அருகில், ஜட்கா ஸ்டாண்டு எதிரில் இருக்கும் ஃபோர்ட் போஸ்ட் ஆபீஸுக்கு மாறுதல் பெற்றுக் கொண்டு வந்தார். காலையில் ஆறரை மணிக்கு தந்தி வேலை (telegraph turn duty). போகும்போதே என்னையும் சைக்கிளில் உடன் அழைத்து செல்வார். எட்டு மணியளவில் ஒரு மணி நேரம் இடை வெளி. என்னை மருத்துவ மனையின் இரண்டாவது தளத்திலிருக்கும் சிகிச்சை அறைக்கு தோளில் சுமந்து சென்று பரிசோதனை மற்றும் நெஞ்சக கபத்தை வெளியேற்றுவது அல்லது ஊசி போடுவது போன்ற சிகிச்சைக்கு பிறகு வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு மீண்டும் பணிக்கு செல்வார். பல மாதங்கள் இது தொடர்ந்தது.
குடும்பம், வேலை, இயக்கம் மூன்றிலும் கவனத்துடன் ஈடுபடுவது அவசியம். ஒன்றைக் காட்டி இன்னொன்றை கவனிக்காமல் இருப்பது நம்மை நெருக்கடியில் தள்ளிவிடும் என்று வாழ்நாளில் எல்லா கட்டத்திலும் நடைமுறைப் படுத்திக் கொண்டே மற்றவர்களுக்கும் வலியுறுத்துவார்.
இன்று என்னுடைய எழுபத்து நான்காவது வயதில் அன்புத் தோழரான தந்தையை நினைத்து வியக்கின்றேன்.
Comments
Post a Comment